“எனது ஆடை, மதத்தால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள்” – நடிகை உர்ஃபி ஜாவேத் வேதனை

பிக் பாஸ் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அணியும் ஆடை எப்போதும் மிகவும் வித்தியாசமாகவும், கவர்ச்சியாவும் இருக்கும். சமீபத்தில் அவர் மேலாடை இல்லாமல் முன்பக்கத்தில் தனது முடியை எடுத்துப்போட்டுக்கொண்டு வெளியில் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து அவர் மீது பாஜக பிரமுகர் சித்ரா வாக் மும்பை அம்போலி போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் ஜாவேத்திற்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து அம்போலி போலீஸில் ஆஜராகி உர்ஃபி ஜாவேத் வாக்குமூலம் கொடுத்தார். அதில் தனது தொழிலுக்கு இது போன்ற ஆடை தேவையாக இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த ஆடை பிரச்னையால் அவருக்கு மும்பையில் வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை என்கிறார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மும்பையில் எனக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனது உடையை காரணம் காட்டி முஸ்லிம்கள் தங்களது பகுதியில் வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர். நான் முஸ்லிம் என்பதால் இந்துக்கள் தங்களது பகுதியில் எனக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர். சில வீட்டு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாகவும் வீடு கொடுக்க மறுக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உர்ஃபி ஜாவேத்தின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உர்ஃபி ஜாவேத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். அதோடு இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், தவறானது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவர் காந்திவலி, போரிவலியில் வீடு பார்ப்பதாக இருந்தால் நான் ஏற்பாடு செய்கிறேன். இந்த பகுதியை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.