கதவில் தொங்கி விளையாடிய சிறுவன்; கழுத்தில் நைலான் கயிறு இறுகியதில் பலியான சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு 4 வயதில் நிரஞ்சன் என்ற மகன், 2 வயதில் மதுபாலா என்ற மகள் என இரண்டு பிள்ளைகள். கிருஷ்ணவேலும், செல்வியும் கருத்து வேறுபாட்டால் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

செல்வி, கீழ விளாத்திகுளத்தில் உள்ள தன் தாயாரின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். பிழைப்பிற்காக அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். நிரஞ்சன், அப்பகுதியில் உள்ள  அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான்.

உயிரிழந்த சிறுவன்

இந்த நிலையில், சிறுவன் நிரஞ்சன் வீட்டின் கதவில் நைலான் கயிற்றைக் கட்டி அதில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக நைலான் கயிற்றில்  சிறுவனின் தலை சிக்கியதுடன் கழுத்தும் இறுகியது. இதில், தலையை வெளியே எடுக்க முடியாமல் திணறிய சிறுவன் நிரஞ்சன்  சத்தம் போட்டபடியே மயங்கியுள்ளான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த செல்வி வந்து பார்த்தபோது நிரஞ்சன் மயங்கிய நிலையில் கதவில் தொங்கியுள்ளான். உடனே, மகனை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததாகச் சொல்லியுள்ளனர். இதனையடுத்து மகனை கட்டியணைத்தபடியே கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார் செல்வி.

செல்வியின் உறவினர்களிடம் பேசினோம், “செல்வியோட கணவர் மது அருந்திவிட்டு தினமும் பிரச்னை செஞ்சுக்கிட்டு இருந்ததுனால ரெண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்கே வந்துட்டா செல்வி. அக்கம் பக்கத்து வீடுகள்ல வீட்டு வேலைகளைச் செஞ்சு பிள்ளைகளை காப்பாத்திட்டு வந்தா. அவளோட மூத்த மகன் நிரஞ்சன், அங்கன்வாடி மையத்துல படிச்சாலும் பாடங்களை உன்னிப்பா கவனிச்சுட்டு வந்து வீட்டுல சொல்லுவான். ஜூன் மாசம் பள்ளிக்கூடத்துல சேர்க்கணும்னு காசு சேர்த்து வச்சிருந்தா.

சிறுவனின் உயிரைப் பறித்த நைலான் கயிறு

நிரஞ்சன் நல்ல கருத்தான பையன்.  அதே நேரத்துல விளையாட்டுத்தனமும் அதிகம் உண்டு. ஊஞ்சல் விளையாடுற மாதிரி நினைச்சுக்கிட்டு நைலான் கயித்தை கதவுல கட்டிக்கிட்டு தொங்கி விளையாண்டிருக்கான். இதை செல்வி கவனிக்கல. மகனோட அலறல் சத்தம் கேட்டுத்தான் வெளிய வந்து பார்த்திருக்கா. பாவம் குழந்தை கழுத்து இறுகி இறந்து போயிட்டான். செல்விக்கு எப்படி ஆறுதல் சொல்லுறதுன்னே தெரியல” என்றனர் துக்கத்துடன்.

கழுத்தில் நைலான் கயிறு இறுகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.