திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் இன்று காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.
அந்த ஹெலிகாப்டரில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அவரது உதவியாளர்கள் மற்றும் விமானிகள் உள்பட மொத்தம் ஆறு பேர் பயணம் செய்தனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் அருகே சென்றது.
அப்போது அந்த பகுதியில் கடுமையான மேக மூட்டம் இருந்ததனால், விமானி அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்க முயற்சி செய்தார். அதன் படி, கடம்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள உக்கினியம் என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.
வானில் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் கடுமையான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வானிலை சீரடைந்த பிறகு ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டு சென்றது.