தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழாரம் சூட்டப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படம் சொதப்பியதால், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கமாட்டார் என்று வதந்திகள் பல வெளியானது. அதன் பின்னர் நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணியில் படம் உருவாகப்போவது உறுதி செய்யப்பட்டது. தற்போது ஜெயிலர் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது, இப்படத்தில் பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கும் முயற்சியில் படத்தின் தயாரிப்புக்குழு ஈடுபட்டு வருகிறது. ‘ஜெயிலர்’ படம் இந்த 2023ம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ‘ஜெயிலர்’ படத்தின் பணிகள் இன்னும் முடிவடையவில்லை மற்றும் படத்தின் பணிகள் நிறைவடைய ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படக்குழுவினர் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடாத வகையில் படம் குறித்த அப்டேட்டுகளை எதையும் வெளியிடாமல் இருக்கின்றனர். இதுதவிர ஏப்ரல் மாதம் 28-ம் தேதியன்று மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகவிருப்பதால் இந்த படத்தோடு ஜெயிலர் படத்தை மோதவிட படக்குழு விரும்பவில்லை என்கிற காரணத்தாலும் படத்தை தாமதமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சூப்பர் ஸ்டாரை திரையில் காண வேண்டும் என்றால் அவரது ரசிகர்கள் ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் ஒரு த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுதவிர பாலிவுட் பிரபலம் ஒருவரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.