புதுடெல்லி: குடியரசுத் தினமான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிடுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வெளியிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இதனை வரவேற்றிருந்தனர். தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அலுவல்கள் நேற்று தொடங்கியவுடன் வழக்கறிஞர்களிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “உச்ச நீதிமன்றத்தின் மின்னணு துறை சார்பாக சுமார் 34,000 தீர்ப்புகள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புகளை மக்கள் இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்கட்டமாக 1,268 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது.
குடியரசு தினத்தன்று அந்த தீர்ப்பு வெளியிடப்படும். இந்தியில 1091, தமிழில் 52, மலையாளத்தில் 29, தெலுங்கில் 28, கன்னடத்தில் 17, ஒடியாவில் 21, மராத்தியில் 14, அசாமியில் 4, உருதுவில் 3, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4 என தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுவதற்கான பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும். வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,’’ என்று கூறினார்.