அட்டாரி-வாகா எல்லையில் உற்சாகமாக நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு..!

வாகா: இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருநாடுகளின் கொடிகளும் இறக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் 74வது ஆண்டு குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். மாநிலங்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. முப்படைகள் மற்றும் கம்பீரமான பீரங்கிகள், டாங்கிகள், நவீன போர் விமானங்களின் அணிவகுப்புகளும் நடைபெற்றன. சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இந்தியாவின் பக்கத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தானின் பக்கத்தில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த ரேஞ்சர்ஸ்களும் பங்கேற்பார்கள்.

அந்த வகையில் அட்டரி-வாகா எல்லையில் இருநாட்டு ‘பின்வாங்கு முரசறை’ (Beating the Retreat) என்று அழைக்கப்படும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி இருநாடுகளின் கொடிகளும் இறக்கப்பட்டன. வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இதனால் வாகா எல்லையில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். வீரமெறிய நடையுடன் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தியதை பார்த்த மக்கள், வெற்றி முழக்கங்களிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.