தூத்துக்குடியில் பரபரப்பு.! அரசு பேருந்து நடத்துனரை தாக்கி வீட்டில் கொள்ளை.! 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.எம்.சத்திரம் ஜான்சி ராணி நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று இரவு ராமசாமி மகள் மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென ராமசாமியின் வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் இருந்த துணிகளை கொண்டு ராமசாமி மற்றும் அவரது குழந்தைகளை கட்டிப்போட்டனர். 

அதன் பின்னர், அந்த நபர்கள் அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன்கள், மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துள்ளனர். அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வனிதாவை பார்த்து அந்த நபர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர். 

இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் வந்த வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகள் துணியால் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, பின்னர் அவர்களை அவிழ்த்து விட்டார். இதையடுத்து ராமசாமி சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள புதுபாலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன் படி, போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று இரண்டு வாலிபர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இரண்டு வாலிபர்களும் தூத்துக்குடி லயன்ஸ்டோன் பகுதியை சேர்ந்த முத்து, சிலுவை என்பதும், இவர்கள் இருவரும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் வி.எம்.சத்திரத்தில் ராமசாமி வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தன் படி, தனிப்படை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சிகிச்சை பெற்று வரும் இருவரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மூன்று பேர் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? கொள்ளையடித்த பொருட்கள் எங்கே? என்பது குறித்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.