தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர், ஜூடோ ரத்தினம். அதிக படங்களில் பணியாற்றியதன் காரணமாக 2013ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார். அத்துடன் போக்கிரி ராஜா, தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் இவர் நடித்துள்ளார்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் பணியாற்றிய பெருமை ஜூடோ ரத்தினத்திற்கு உண்டு. தமிழ்நாடு அரசு இவரின் கலைத்திறனை பாராட்டி கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது. இந்த சூழலில் ஜூடோ ரத்தினத்தின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூடோ ரத்தினம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
80-களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் ரத்னம். பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்னம்தான் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குனராக இருந்திருக்கிறார். இறுதியாக 1992ஆம் ஆண்டு வெளியான ‘பாண்டியன்’ படம் வரையில் அவர் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
1200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார், ஜூடோ ரத்னம். இந்நிலையில், உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் நேற்று காலமானார்.
அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,”ஜூடோ ரத்தினத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார்.
முரட்டு காளை படத்தில் அவர் அமைத்துக்கொடுத்த ரயில் சண்டையை இன்னும் யாராலும் மறக்க முடியாது. சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.