தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம்

தமிழ் சினிமாவில் மட்டும் 211 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சம்பத் ராம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பல வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது 25ம் ஆண்டு சினிமா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மாளிகப்புரத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். அவர் கூறியதாவது: கமல் சாருடன் விக்ரம் படத்தில் நான் சிறு வேடத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்துவிட்டு தான் மாளிகப்புரம் தயாரிப்பாளர் இந்தப்பட வாய்ப்பை வழங்கினார். மலையாளத்தில் எனக்கு இது 6வது படம். என் முதல் படமே மோகன்லால் படம்தான், அதில் முக்கிய வில்லனாக நடித்தேன். பிறகு மம்முட்டி சார் என மலையாளத்தில் இதுவரை நான் நடித்த 6 படங்களும் பெரிய பெரிய நடிகர்கள் படங்கள்தான்.

மலையாள திரையுலகம் எப்போதும் தமிழ் கலைஞர்களை மதிக்கிறது. இதனை நான் அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். கசக்கி பிழிகிற அளவிற்கு வேலை வாங்க மாட்டார்கள். படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்துவார்கள். எனக்கு தமிழில் வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தந்தார்கள்.

தற்போது காசரகோட், சாலமன், தங்மணி என 3 மலையாள படங்களில் நடித்து வருகிறேன். கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்து வரும் சலார், நேனே நான் ஆகிய தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விக்ரம் நடிக்கும் தங்கலான், கட்டில், கங்கனம், சூர்ப்பனகை ஆகிய படங்களோடு, தி கிரேட் எஸ்கேப் மற்றும் தி பேர்ல் பிளட் என்ற ஆங்கிலப் படங்களிலும் நடிக்கிறேன். வீரப்பன் இணைய தொடரிலும் நடிக்கிறேன்.

இவ்வாறு சம்பத் ராம் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.