திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். கூலி தொழிலாளியான இவர் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளதில், தற்போது மகேஸ்வரி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு பாண்டியன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செஞ்சியில் இருந்து தேசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இவருடைய இருசக்கரவாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன் பின்னர், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.