“ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடாவிட்டால் வேட்பாளரை ஓபிஎஸ் அறிவிப்பார்” – ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ் தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜன.28) ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால், உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார். தேர்தல் வேலையை எப்போது தொடங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும். அவர் நிச்சயம் வெற்றிக்கனியை அடைவார். 31-ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதற்குள் அதிமுக நல்ல முடிவை எடுக்கும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.