முஷ்டியை முறுக்கும் ஓபிஎஸ் அணி: எடப்பாடி அணிக்கு டஃப் கொடுக்க பிளான்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள
ஓபிஎஸ்
தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அணியினர் 117 பேரை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜனவரி 28) ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால், உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார். தேர்தல் வேலையை எப்போது தொடங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும். அவர் நிச்சயம் வெற்றிக்கனியை அடைவார். 31ஆம் தேதி தான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதற்குள் அதிமுக நல்ல முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.