விழுப்புரம் அருகே, அதிமுக கிளைச்செயலாளரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை தேடி வருகின்றனர்.
நல்லரசன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன் அதிமுக கிளைச் செயலாளராகவும், இவரது மகன் சதீஷ் கிளை மேலவை பிரதிநிதியாகவும் உள்ளனர்.
இந்நிலையில், சத்துணவு பொறுப்பாளர் பணிக்காக ஒரு சிலரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று, அதனை கோலியனூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகனிடம் சதீஷ் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்களில் ஒருவர் பணத்தை திரும்பக் கேட்டதையடுத்து, சதீஷ் பேட்டை முருகனிடம் கேட்டுள்ளார்.
இதனால், தகராறு ஏற்பட்ட நிலையில், சனிக்கிழமை இரவு அடியாட்களுடன் சதீஷின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது பேட்டை முருகன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த வளவனூர் காவல் நிலையப் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.