பவானிசாகர் அருகே நாயை வேட்டையாட துரத்திய சிறுத்தை: வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி கல் உடைக்கும் தனியார் கிரசர் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிரசர் பகுதியில் ஒரு நாய் காவலுக்கு படுத்திருந்தது. அப்போது அங்கு வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட துரத்தியது.  ஆனால், நாய்  வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியது. சிறுத்தை நாயை துரத்திய காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.  சிறுத்தை, நாயை துரத்தும் அந்த காட்சி தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளாமுண்டி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.