அண்ணாமலை ஆலோசனையை ஓபிஎஸ் கேட்பாரா? மாலை வரும் குட் நியூஸ் என்ன?

அதிமுக உட்கட்சி மோதல் ஒரு முடிவை எட்டாமல் நீண்டு கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் இன்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தரப்பின் வேட்பாளர் தென்னரசு ஏற்கனெவே இரு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். எனவே அவரை வேட்பாளராக அறிவித்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும். எனவே ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசியுள்ளோம். இன்று மாலைக்குள் நல்ல முடிவை அவர் எடுப்பார் என்று நம்புகிறோம்.

நாங்கள் ஒரு தேசிய கட்சி. பல மாநிலங்களில் கூட்ட்ணியில் இருக்கிறோம். நாங்கள் ஒரு சுயேச்சை சின்னத்துக்கு ஓட்டு கேட்க முடியாது. நாங்கள் அதிமுக இரு அணிகளை இணைக்க வேண்டும், அவர்களது உட்கட்சியில் தலையிட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு நல்ல முடிவெடுக்க இருவரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினோம்.

பாஜக, அதிமுகவின் தலைவர்கள் ஆலோசிப்பது குறித்து கீழ் மட்டத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தெரியாது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் நான் சொல்லியிருக்கிறேன். சில தலைவர்கள் சில கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அவர்களை நான் தொடர்பு கொண்டு இவ்வாறு செய்யக் கூடாது என்று கூறினேன். அதிமுகவிலும் கீழ் மட்ட தலைவர்கள் மேலே என்ன நடக்கிறது என தெரியாமல் பேசியிருக்கலாம்.

இன்னும் மூன்று நாள்கள் தான் வேட்புமனு தாக்கலுக்கு உள்ளது. விரைவில் முடிவெடுக்க வேண்டும். பிரச்சாரத்திற்கு குறைவான நாள்களே உள்ளன.

ஓபிஎஸ்ஸிடம் பேசியுள்ளோம் இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.