ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா

நடிகை சமந்தா முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடன் நடித்த தெலுங்கு திரையுலகின் வாரிசு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மட்டுமே நீடித்த அவர்களது இல்லற வாழ்க்கை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீக்கிரமே முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கணவர் நாகசைதன்யாவை பிரிந்து வாழும் சமந்தா, அதன்பின்னர் கணவர் மற்றும் மாமனார் நாகார்ஜுனா ஆகியோர் பற்றி எந்த ஒரு இடத்திலும் பேசுவது இல்லை. நாகார்ஜுனா படங்கள் வெளியாகும்போது கூட வாழ்த்துக்களும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் நாகசைதன்யாவின் தம்பியும் தனது மைத்துனருமான நடிகர் அகிலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் சமந்தா. அகில் தற்போது தெலுங்கில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஏஜென்ட்'. ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் மம்முட்டி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த தகவலை, “காட்டு விலங்கு ஒன்று ஏப்ரல் 28ல் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.. உஷாராக இருங்கள்” என்று மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அகில் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவுக்கு கீழே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக “பீஸ்ட் மோட் ஆன்” (மிருகத்தனம் ஆரம்பம்) என்கிற வார்த்தைகளை குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார் நடிகை சமந்தா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.