கண்காணிப்பு உட்பட பலவித பணிகளுக்கு 850 நேனோ ட்ரோன் வாங்குகிறது ராணுவம்

புதுடெல்லி: இந்திய ராணுவம் கடந்த சில மாதங்களாக பலவித ட்ரோன்களை கொள்முதல் செய்யும் திட்டங்களை தொடங்கியுள்ளது. சீன எல்லையில் கடந்த 33 மாதங்களாக முரண்பாடு தொடர்கிறது. இதனால் சீன எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியை ராணுவம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த கண்காணிப்பு பணிக்கு, வீரர்களை ஈடுபடுத்துவதை விட ட்ரோன்களை ஈடுபடுத்துவது மிகவும் எளிதான பணியாக உள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெறும் போரிலும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் ராணுவ கண்காணிப்பு பணி, சிக்கலான இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல், ஆயுத தாக்குதல் போன்ற பணிகளுக்கு ட்ரோன்கள் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஆளில்லா விமானங்கள் போல் செயல்படும் 80 ஆர்பிஏஎஸ் வகை ட்ரோன்களையும் இந்திய ராணுவம் வாங்கவுள்ளது. இதற்காக 10 ஓடுதளங்கள் அமைக்கப்படவுள்ளன. கண்காணிப்பு மற்றும் ஆயுத தாக்குதல் நடத்தும் 12 செட் ஏ-எஸ்ஏடிஎஸ் வகை ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவுடன் கட்டுப்பாட்டு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் 75 ட்ரோன்களும் ராணுவத்துக்கு வாங்கப்படவுள்ளன. கண்காணிப்பு மற்றும் ஆயுத தாக்குதல் நடத்தும் ட்ரோன்களில் 7 செட்களை சீன எல்லையிலும், 5 செட் ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைகளிலும் பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பலவித பணிகளுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் 850 நானோ ட்ரோன்களை ராணுவம் வாங்கவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.