ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்: ஏன் இந்த முடிவு?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற உள்ளதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த இடையீட்டு மனு தொடர்பான விசாரணையில் இரு தரப்பும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை ஒருமனதாக தேர்ந்தெடுத்து இரட்டை இலையில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார்.

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தென்னரசுவை வேட்பாளராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஒரு படிவத்தை கொடுத்து கையெழுத்து கேட்டிருந்தார். அந்த கடிதங்களை வாங்கிக்கொண்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க இன்று டெல்லி சென்றுள்ளார்.

ஆனால் ஓபிஎஸ் தரப்பு அவைத் தலைவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் தரப்பு வேட்பாளர் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்ற செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிடக் கூடாது, அதிமுக தோல்வியைத் தழுவிவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.