செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி: செல்லூர் ராஜு காட்டம்!

மன்னர் திருமலை நாயக்கரின் 440ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு பேசும்போது, “அதிமுக ஆட்சிக்காலத்தில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. மன்னர் திருமலை நாயக்கருக்கு வெண்கல சிலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் வந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக திமுக அரசினர் நடத்தவில்லை. திமுக அமைச்சர் பெருமக்கள் அரசு விழாவில் கலந்து கொள்ளவில்லை. கலைஞரின் பேனா சிலை விவகாரத்தில் சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்கள். கலைஞர் பேனா சிலையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போதும் நன்றாக கூவினார். அவர் பல கட்சிக்கு சென்று வந்தவர். அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா. திமுக குடும்பத்தை பற்றி தரை குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி. அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அவர் ஒரு பச்சோந்தி.” என்று விமர்சித்தார்.

இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த செல்லூர் ராஜு, “மிகப்பெரிய மாற்றத்தை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கொடுப்பார். திமுக அரசு பொய்யாக பேசி ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, வீட்டு வரியை உயர்த்த மாட்டேன், மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என கூறிவிட்டு அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.