தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ‘வேட்பாளர் ஒப்புதல்’ படிவங்கள் சமர்ப்பிப்பு

சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் இன்று (பிப்.6) அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தினர். இதற்கிடையே, பழனிசாமி தரப்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதில், இரு தரப்பினரும் கலந்துபேசி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று (பிப்.6) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இருவரும் சமர்ப்பித்தனர். இதில், 2501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை வழங்கி உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் படிவங்களை பெற்ற 128 பேரில் ஒருவர் கூட தென்னரசுவிற்கு ஆதரவாக படிவங்களை வழங்கிவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.