நம்பிக்கைதான் இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. பேரிடர்களை, பெருந்துயர்களையெல்லாம் கடந்து இந்த பூமிப்பந்து சுழல்வதற்கு மிகப்பெரும் ஆக்கசக்தியாக இருப்பது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை தங்கள் வாழ்வின் வழியாகவும் செயலின் வழியாகவும் தூவிக்கொண்டேயிருக்கிற தமிழ் மண்ணின் மனிதர்களை ஒவ்வோராண்டும் அடையாளம் கண்டு, பிரமாண்டமான மேடைகளில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவித்து வருகிறது ஆனந்த விகடன்.

பேரிடர் காலங்களில் முகமறியா மனிதர்களுக்குக் கரம் கொடுத்த தன்னார்வலர்கள், அதிகாரத்துக்கு அஞ்சாமல் அறத்தின் பக்கம் நிற்கும் அரசு ஊழியர்கள், நிலத்தையும் நீரையும் காக்க களத்தில் நின்று செயலாற்றும் சூழலியல் காவலர்கள், மனித மாண்பையும் உரிமையையும் காக்கப் போராடும் செயற்பாட்டாளர்கள் என்று தமிழ் சமூகத்தின் பெருமிதமாக வெளிச்சம் தேடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பலர் வரும் 11-ம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் நிகழ்வில் ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகளைப் பெறவிருக்கிறார்கள்.
2021 மற்றும் 2022 என இரண்டு ஆண்டுகளுக்கான விழா காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இரு நேரங்களில் நடக்கிறது. மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் இந்த விழாவில் நீங்களும் பங்கேற்க விருப்பமா?