2018, 2019 உடன் ஒப்பிட்டால் திமுக அரசில் 3-ல் ஒரு பங்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மட்டுமே: அண்ணாமலை

சென்னை: “ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற பொய்யை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த காலங்களில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கையில் பாதியளவு கூட, கடந்த 2 ஆண்டுகளில் நடத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற பொய்யைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த காலங்களில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கையில் பாதியளவு கூட, கடந்த 2 ஆண்டுகளில் நடத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களில், 2018, 2019 ஆண்டை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலைவாய்ப்பு முகாம்களைத்தான் நடத்தியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்காமல், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வாய்ப்புகளையும் தடுத்து, இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக.

உடனடியாக, தமிழக முதல்வர், தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.