அதானி விவகாரத்தில் உடனடி விசாரணை வேண்டும் – மகளிர் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி,

அதானி நிறுவனங்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரசார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண் தொண்டர்கள் கலந்துகொண்டு, அதானி விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் நீதா டிசோசா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அதானி விவகாரத்தில் உடனடி விசாரணை வேண்டும். மக்கள் கடின உழைப்பில் ஈட்டிய பணத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையில் இருந்து மக்களையும், நாட்டையும் திசை திருப்பும் மத்திய அரசை கண்டிக்கிறோம்’ என தெரிவித்தார்.

பசியுடன் இருக்கும் மக்களிடம் பா.ஜனதா அரசு கருணை காட்டவில்லை எனவும், பொதுமக்கள் பணத்தை பறித்து அதானிக்கு கொடுப்பதே பிரதமர் மோடியின் தாரக மந்திரம் எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.இந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.