பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் பாதிப்பு.. மல்லிகை ஒரு கிலோ ரூ.3,000; பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.1,600க்கு விற்பனை!!

குமரி : தமிழ்நாட்டில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்ததால் ஒரே நாளில் மல்லிகை பூவின் விலை ரூ.1000 உயர்ந்து ரூ.2,300க்கு விற்பனையாகிறது.  தமிழ்நாட்டில் உள்ள மலர் சந்தைகளில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வருகை தரும் பிச்சிப்பூ, மல்லிகையின் வரத்து வெகுவாக குறைந்து அவற்றின் விலை கடும் உயர்வை கண்டுள்ளன.

நேற்று கிலோ ரூ.1,300க்கு விற்பனை ஆன மல்லிகை ஒரே நாளில் ரூ. 1000 அதிகரித்து ரூ.2,300க்கு விற்பனையானது. இதே போல நேற்று ரூ.2,000க்கு விற்பனை ஆன பிச்சிப்பூ ரூ.300 உயர்ந்து ரூ.2,300க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூவின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.1,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.