புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மக்களவையில் அளித்த பதிலில், ‘இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டு உள்ளன. ஒமிக்ரான் மற்றும் அவற்றின் பிற உருமாறிய வகைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் எக்ஸ்.பி.பி., பி.கியூ. ஆகியவை பரவலாக மேலோங்கி காணப்படுகிறது.
சில நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து மற்றும் அந்நாடுகள் வழியே வர கூடிய விமான பயணிகள் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ்களை கொண்டு வருவது அவசியம் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதுதவிர, அனைத்து சர்வதேச விமான பயணிகளிடம் மொத்தம் 2 சதவீதம் என்ற அளவில் இந்திய வருகைக்கு பின்னர் கொரோனா பரிசோதனைகள் விமான நிலையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.