சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக புதிய அறிமுகம் மதுரை ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் கருவாடு விற்பனை: ரூ.100 முதல் ரூ.1000 வரை பாக்கெட்களில் கிடைக்கும்

மதுரை: நாட்டிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனை  துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளுக்கேற்ற பாரம்பரிய உணவு வகைகள், உற்பத்திப் பொருட்களை ரயில்  நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, பிரதமரின் ‘ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் முதன்முறையாக ‘லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட்’ என்னும் கருவாடு விற்பனைக்கூடம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அவர்கள் எளிதில் வாங்கிச்செல்லும் வண்ணம் பல்வேறு எடை அளவுகளில் பாக்கெட் ஒன்று ரூ.100 முதல் ரூ.1000 வரை கருவாடு விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கருவாடுகள் தயார் செய்யப்பட்டு, இந்த விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு ரயில்வேத்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் மதுரை ரயில் நிலையத்தில்தான் முதன் முறையாக கருவாடு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.