தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்: வழக்கில் முக்கிய திருப்பம்!

பெற்றோரால் கடத்தப்பட்ட கிருத்திகா பட்டேல் எனும் பெண்ணை ஆஜர்படுத்த கோரி காதலன் தொடர்ந்த வழக்கில், அந்த பெண் தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன்.

இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவருடைய மகள் கிருத்திகாபட்டேல். நானும் கிருத்திகாபட்டேலும் கடந்த 6வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த 27-12-2022 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தார். எனவே, 4-1-23 அன்று நானும் எனது மனைவியுடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினோம்.

விசாரணையின் முடிவில் கிருத்திகா பட்டேல், தன்னுடைய கணவரான என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்து சென்றேன். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று என்னுடைய மனைவியுடன் தென்காசி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். இந்த புகாா் மனுவின் மீதான விசாரணைக்காக ஜனவரி 25ஆம் தேதியன்று நான், என் மனைவி, தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினேன்.

ஆனால், நவீன்பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறியிருந்தார். இதனால், நான் எனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி எனது மனைவி கிருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.

நான் இது குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், கிருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கிருத்திகா பட்டேலை கடத்தி சென்று விட்டனர். எனவே, கிருத்திகா பட்டேல் மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், மனுதாரர் மாரியப்பன் வினித் திருமண புகைப்படங்கள் காட்டி கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர். கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்காசி நீதிமன்றத்தில் கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணையில் பெற்றோர் உடன் அவர் செல்வதாக தெரிவித்துள்ளார் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆட்கொணர்வு மனுவை பொருத்தவரையில் பெண் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ அவருடன்தான் அனுப்பப்படுவார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு தரப்பில், கிருத்திகா பெற்றோர்கள் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உறவினர்களிடம் கிருத்திகாவை ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக அவரது உறவினர்கள் தரப்பில் மனு செய்யவும், அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், கிருத்திகா பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் கூறி வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் கிருத்திகா பெற்றோர் தரப்பில், இந்த விவகாரத்தில் மீடியாக்கள் மீது புகார் தெரிவித்தனர் அதற்கு நீதிபதிகள் நீங்களாக விருப்பப்பட்டு செய்தது. இதில் மீடியாக்களை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.