புதுடெல்லி: பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது அங்கு நடந்த கோத்ரா கலவரம் தொடர்பாக சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானியின் நிறுவனத்தின் பங்கு வர்த்தக மோசடிகள் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. மேற்கண்ட இரு சம்பவங்களும் வெளிநாட்டில் இருந்து வந்த பரபரப்பு செய்திகள் என்பதால் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் ‘தி சண்டே கார்டியன்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமர் மோடிக்கு எதிராக வெளிநாட்டில் சதி வேலைகள் நடந்துள்ளன.
இதற்காக கடந்த 3 மாதமாக டெல்லி முதல் லண்டன் வரை சில ரகசிய சந்திப்புகளும், ஆலோசனைகளும் நடந்துள்ளன. அப்போது 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எப்படி தோற்கடிப்பது குறித்து பேசப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் டெல்லியில் மட்டும் மூன்று சந்திப்புகள் நடந்துள்ளன. அப்போது 2024 தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் எவ்வாறு பிரசாரம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. வரும் செப்டம்பரில் பிரதமர் மோடிக்கு எதிராக 180 நாள் மெகா பிரசாரத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த பிரசாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்று ெதரிவித்துள்ளது.