ஈரோடு கிழக்குத் தொகுதியில் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று வளையக்கார வீதி, பெரியார் வீதி, நடுமாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில் வீதி, கச்சேரி வீதி உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் பொது மக்களிடம் நோட்டீஸ் வழங்கியும் மேளம் அடித்தும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளரிடம் பேசிய உதயகுமார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவதற்காக தமிழகத்தில் உள்ள 33 அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். மனமா? பணமா? என்று பார்க்கும் பொழுது மனம் தான் வெல்லும். மீண்டும் பொதுமக்கள் ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்.
செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் கூறும் பொழுது எடப்பாடி பழனிசாமி எப்பொழுது முதல்வர் ஆவார் என்ற ஆர்வத்துடன் மக்கள் கேட்கின்றனர். ஆடு, மாடுகளைப் போல் திமுகவினர் பொதுமக்களை பட்டியலில் அடைத்து வைக்கின்றனர். அதிகாரிகள் வேண்டுமானால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். ஆனால் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம்.
திமுக
அரசின் இரண்டு ஆண்டு கால மக்கள் விரோத ஆட்சியை மூடி மறைக்கவே பணத்தை வாரி இறைக்கின்றனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை என பகலிலேயே நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.
பணத்தைக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். பணத்தை வாங்கிக் கொண்டு மக்கள் விரோத அரசை தூக்கி எறிய ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் தென்னரசுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.