புதுச்சேரி: ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ‘கிரேடு பே’ முரண்பாடுகள் களையப்பட்டு, திருத்தப்பட்ட எம்.ஏ.சி.பி., திட்டம், கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டிற்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும். ஆனால் 10 ஆண்டு பணி புரிந்தும் பதவி கிடைக்காத அரசு ஊழியர்கள், எம்.ஏ.சி.பி., எனப்படும், ‘மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்’ திட்டத்தின்படி, தானாகவே அடுத்த சம்பள நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடும்.
இருப்பினும், திருத்தப்பட்ட எம்.ஏ.சி.பி., அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும்போது பல்வேறு அரசு நிர்வாக காரணங்களால் அதிகாரிக்கு உடனே பதவி உயர்வு கிடைக்காது. அவர்களது பிரச்னை தீர்ந்த பிறகு முன் தேதியிட்டு பதவி உயர்வு அளிக்கப்படும். இது நோஷனல் புரமோஷனல் எனப்படுகிறது.
இந்த நோஷனல் புரமோஷனில் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு பிரச்னை எழுந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டிற்கான பதவி உயர்வினை, முன் தேதியிட்டு கொடுத்த நோஷனல் புரமோஷனல் காலத்தை கணக்கில் எடுத்து கொள்வதா அல்லது குற்றச்சாட்டில் தன்னை விடுவித்து கொண்டு அரசு ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து கணக்கில் எடுத்து கொள்வதா என்ற குழப்பம் நிலவியது.
இருப்பினும், நோஷனல் புரமோஷனல் காலத்தை கணக்கில் எடுத்து கொண்டு அரசு ஊழியர்களுக்கு எம்.ஏ.சி.பி., அமல்படுத்தப்பட்டது.இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டதில், தவறுதலாக கணக்கிட்டு, வழங்கிய எம்.ஏ.சி.பி., தொகையை பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த எம்.ஏ.சி.பி., பிடித்தத்தில் இருந்து தற்போது சில விதிவிலக்கு அளித்து அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், தவறுதலாக கணக்கிட்டு அளித்த எம்.ஏ.சி.பி., தொடர்பாக, வரும் 30 நாட்களுக்குள் மீண்டும் மறுகணக்கீடு செய்ய வேண்டும். தவறுதலாக கணக்கிட்டு வழங்கிய எம்.ஏ.சி.பி., தொகையை சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பிடித்தம் செய்ய வேண்டும்.
இருப்பினும் ‘சி’மற்றும் ‘டி’பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெற உள்ள அரசு ஊழியர்களுக்கும் இந்த பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் நோஷனல் புரமோஷனுடன் அரியர்ஸ் தொகை பெற்று ஐந்தாண்டு கடந்தவர்களுக்கு பிடித்தத்தில் இருந்து விலக்கு அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ‘சி’மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களை தவிர்த்து ‘ஏ’ மற்றும் ‘பி’ ஊழியர்களுக்கு தவறுதலாக கணக்கிட்டு வழங்கிய எம்.ஏ.சி.பி.,யை பிடித்தம் செய்வதற்கான பணியை அனைத்து அரசு துறைகளும் துவக்கியுள்ளன.
காரணம் என்ன
நோஷனல் புரமோஷனல் முன் தேதியிட்டு கொடுத்திருந்தாலும் அந்த காலக்கட்டத்தில் அந்த அரசு ஊழியர் பணி செய்யவில்லை. குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தான் அந்த பதவிக்கே அரசு ஊழியர் செல்கிறார். எனவே அரசு ஊழியர் பதவி உயர்வுக்கான கிரேடு பேவுக்கு அமரும் தேதியில் இருந்தே அடுத்த எம்.ஏ.சி.பி., எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்