தனுஷ் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது ’வாத்தி’. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் கல்வி அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ஆசிரியர் – மாணவர் சிக்கல்களும் இந்தப் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வாத்தி படத்தின் டைட்டில் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பேச்சுகள் எல்லாம் ஆசியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைட்டிலை பொறுத்தவரை தெலுங்கில் சார் என்ற தலைப்பில் ரிலீஸ் செய்யப்படும் இந்தப் படம் தமிழில் ஏன் ’வாத்தி’ என ரசக்குறைவான தலைப்பில் வெளியாகிறது என ஆசியர் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசியர் உள்ளிட்ட பல வார்த்தைகளில் மரியாதைக்குரிய வகையில் அழைக்க வேண்டிய சமூகத்தை முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தன்னுடைய பட தலைப்பிலேயே அசிங்கப்படுத்திவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர் ஆசியர்கள். மேலும், இதனை தமிழக அரசு எப்படி அனுமதித்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஒரு தசாப்பதமாகவே ஆசிரியர்கள் மீதான மதிப்பு என்பது மாணவர்களிடம் இல்லை என்ற குற்றசாட்டையும் முன்வைத்துள்ளனர்.
இதற்கு சமூகத்தில் இருக்கும் பல்வேறு காரணிகளில் சினிமாவும் ஒன்று என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய வார்த்தைகளும் சர்ச்சையாகியுள்ளது. படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஒரு பொதுமேடையில் நடிகர் என்ற முறையில் தனுஷ் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால், நேரடியாக தினம்தோறும் மாணவர்களை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு தான் தெரியும் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்.
காதல் குறித்தும், பெண்களை பின் தொடர்வதும், சிக்னல் கொடுப்பது குறித்தெல்லாம் தனுஷ் பேசியது நிச்சயம் மாணவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், உடனடியாக அவர்கள் மத்தியில் இது பிரதிபலிக்கும் என்றெல்லாம் தெரிவித்திருக்கும் ஆசிரியர்கள், ஒரு பொறுப்புள்ள நடிகராக தனுஷ் இதனையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர். இதேபோல் சமூக ஆர்வலர்கள் சிலரும் வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய பேச்சுகளுக்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.