நடிகை பலாத்கார வழக்கு: மஞ்சுவாரியரிடம் விசாரிக்க கோர்ட் அனுமதி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடித்து வருகிறார்.

பல வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையை கடந்த ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் தொடர் விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதால் விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நடிகை மஞ்சுவாரியர் உள்பட சில சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி நடிகர் திலீப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதால் அது தொடர்பாக நடிகை மஞ்சு வாரியர் உள்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திலீபின் மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தாக்கல் செய்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நடிகை மஞ்சுவாரியர் உட்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மஞ்சு வாரியர் திலீபின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.