அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் – அரசாணை வெளியீடு

சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்.

பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விடுமுறைக் காலமாகக் கருதப்படும். தலைமைச் செயலகப் பணியாளர்களை பொறுத்தவரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து, அந்தந்த துறைச் செயலர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.