விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து..!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ. தலைவர் நிதி சிப்பெர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நடப்பாண்டு 10 மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வுகளை எவ்வித தவறுகளும் நடைபெறாமல் நடத்தி முடிக்கவும், விடைத்தாள்களையும் உரிய முறையில், நேரத்தில் மதிப்பீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, விடைத்தாள்களை திருத்துவதற்கான வழிகாட்டு முறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும், நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் விடைத்தாள் மதிப்பீட்டின் தரத்தை உயர்த்துவதற்காக முதுநிலை ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 12 நாள்களில் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதகேற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசிரியரும் தலா 20 முதல் 25 விடைத்தாள்களை திருத்தி முடிக்க வேண்டும். எனவே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை தவறாமல் அனுப்ப வேண்டும். இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து மற்றும் அபராதம், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.