கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கையில் 4 அஸ்திரங்கள்… ஒர்க்-அவுட் ஆகுமா இமாச்சல் மாடல்?

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ்
கட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது. கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற முடியாததால் மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜக நடத்திய ஆபரேஷனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்படி ஒரு சூழல் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

மல்லிகார்ஜுன கார்கே திட்டம்

அதற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனமும், களப் பணியும் மிகவும் அவசியமாகிறது. இதனை உணர்ந்து கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செயல்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரது சொந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் என்பதால் தெளிவான ஸ்கெட்ச் போட்டு வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.

அதேசமயம் பிரியங்கா காந்தியும் சில ஆலோசனைகள் வழங்கியிருப்பதாக தெரிகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இங்கு 1985க்கு பின்னர் ஒரே கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை என்ற எழுதப்படாத வரலாறு இருக்கிறது.

ஹிமாச்சல் தேர்தல் மாடல்

அதன்படி பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது. இதற்கு சில வியூகங்களும் கைகொடுத்தன. இவற்றை தான் கர்நாடக மாநிலத்தில் பயன்படுத்த தீவிரம் காட்டி கொண்டிருக்கின்றனர். மொத்தம் நான்கு விஷயங்களை செயல்படுத்துவது தான் கர்நாடக மாநில காங்கிரஸின் நோக்கம்.

அடிமட்டத்தில் இருந்து வேலை செய்வதுபல்வேறு சர்வேக்கள் நடத்தி அதன் தகவல்களை வெளியிடுவதுயாருக்கு வாக்களிப்பது என தள்ளாட்டத்தில் இருக்கும் வாக்காளர்களை வசப்படுத்துவதுநம்பகத்தன்மை வாய்ந்த வார் ரூமை கட்டமைத்து, அதன் பணிகளை மீடியா உடன் இணைத்து கொள்வது

பாஜக அரசின் ஊழல்கள்

இந்த நான்கு அஸ்திரங்கள் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் எடுபடுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. முன்னதாக ஆளும் பாஜக அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், அரசு ஒப்பந்த பணிகளில் டெண்டர் முறைகேடு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த விஷயங்களை காங்கிரஸ் முடிந்தவரை சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கட்சி தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு பெரும் தலைவர்கள்

அதுமட்டுமின்றி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என இரண்டு முக்கிய தலைவர்களை முன்வைத்து பிரச்சார களத்தை காங்கிரஸ் வடிவமைத்துள்ளது. இவர்கள் இருவரில் ஒருவர் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சி நடத்திய சர்வே ஒன்றில் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் எனச் சொல்லப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் கிடைத்தாலே போதும். சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் காங்கிரஸ் 108 முதல் 114 இடங்களில் வெற்றி பெறக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது. அதாவது ஆதரவு வட்டம் சற்றே குறைந்திருக்கிறது. எனவே அடுத்த இரண்டு மாதங்கள் காங்கிரஸ் மிகவும் கவனமாக காய்களை நகர்த்த வேண்டியது அவசியமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.