கூடுதல் பென்சனுக்கு ’EPFO’ வெளியிட்ட அறிவிப்பு.. மார்ச் 3ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள்!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

ஊழியர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே பி.ஃஎப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி ஆகும். இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.

image
இச்சூழலில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், ஊழியர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான அதிகபட்ச மாத சம்பள வரம்பு 6,500 ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழிகாட்டுதலை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையின் படி, அதிக ஓய்வூதியம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 3 மார்ச் 2023 உடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2014க்கு முன்பு சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்கள் ஊதியத் தொகையில் 8.33 சதவீதத் தொகை பணியாளர் பங்காக செலுத்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு, பணியாளர்களும் தனியார்  நிறுவனமும் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெபாசிட் செய்யும் முறை, ஓய்வூதியத்தை கணக்கிடுதல் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த சுற்றறிக்கைகளில் விவரிக்கப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது.

image
மிகக் குறுகிய காலக்கெடு கொடுத்து விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருப்பதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், ஓய்வூதியத் தொகை குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படாததால், சுற்றறிக்கையில் ஒரு தெளிவு இல்லை என்றும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்வதற்கான காலக்கெடு மார்ச் 3 வரை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.