டெல்லி: சுகாதாரம் உட்பட பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் நம்பிக்கை அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் பில் கேட்ஸ். பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை அன்று அவர் சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ்நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதன் காரணமாக உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்குமிக்க நபராக அவர் திகழ்கிறார். இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய பிரபலங்களை அவர் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை அவர் சந்தித்துள்ளார்.
“கரோனா தொற்றுப் பரவலின்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் மில்லியன் கணக்கான மக்களின் உயிரை காத்தது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இன்னும் பிற நோய்களுக்கு மருந்தாக உதவி வருகிறது.
கோ-வின் (Co-WIN) உலகத்திற்கே முன்மாதிரி என பிரதமர் மோடி நம்புகிறார். அதை நானும் ஏற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை அவர் புகழ்ந்துள்ளார். குறிப்பாக கோ-வின் தளம் வழியே பில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி மற்றும் அதற்கான டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். நேற்று, இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் குறித்து அவர் புகழந்திருந்தார்.
My conversation with Prime Minister @narendramodi left me more optimistic than ever about the progress that India is making in health, development, and climate. https://t.co/igH3ete4gD @PMOIndia
— Bill Gates (@BillGates) March 4, 2023