CTR Nirmal Kumar Joins AIADMK : தமிழ்நாடு பாஜகவின் ஐ.டி பிரிவு தலைவராக இருந்த CTR நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் அணியின் தலைவராக CTR நிர்மல்குமார் இருந்து வருகிறார். தற்போது, அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
CTR Nirmal Kumar Joins AIADMK : பாஜகவில் இருந்து விலகிய கையுடன், CTR நிர்மல்குமார் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்,”கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை.
என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!
உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!
விடைபெறுகிறேன் pic.twitter.com/jcXAtJroid
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 5, 2023
அல்பத்தனம்…
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
மனநலம் குன்றிய மனிதர்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.
திமுகவுடன் அண்ணாமலை கூட்டு?
2019ஆம் ஆண்டில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?” என தனது ஆதங்கத்தையும் கொட்டியுள்ளார்.
அண்ணாமலையை சுற்றும் சர்ச்சை
2021ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலுக்கு பின், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அதன்பின்னர்தான், பாஜகவின் உட்கட்சியில் பெரிதும் சலசலப்பு ஏற்பட தொடங்கியது. பாஜக கே.டி. ராகவன் மீதான குற்றச்சாட்டு, திருச்சி சூர்யா – டெய்சி பிரச்னையை அடுத்து திருச்சி சூர்யா கட்சியில் இருந்து விலகியது, காய்திரி ரகுராம் விலகல் உள்ளிட்ட அனைத்தும் அண்ணாமலையை சுற்றியே வட்டமடிக்கின்றன. கட்சியின் நிர்வாகிகளை வேவு பார்ப்பதாக பல குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையில், அதே குற்றச்சாட்டை தற்போது CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.