ரசிகர்களை அழ வைப்பது எளிது, சிரிக்க வைப்பது கடினம்: காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தற்போது தமிழில் இந்தியன் 2, கருங்காப்பியம் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள படம் கோஸ்டி. இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். இந்த படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்துள்ள காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

நான் நடித்திருக்கும் பேய் காமெடி படம் இது. ஏற்கெனவே நிறைய காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். பேய் படத்திலும் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் நான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஒன்று போலீஸ். கதைப்படி நான் சீரியசான போலீஸ்தான். ஆனால் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு காமெடி போலீசாக தெரிவேன். ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு நடித்திருக்கிறேன். அதோடு 7 இயக்குனர்களோடு நடித்திருக்கிறேன். ரசிகர்களை அழ வைப்பது எளிது. சிரிக்க வைப்பது கஷ்டம். இந்த படத்தில் சிரிக்க வைக்க நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன்.

குழந்தை பெற்ற கையோடு நடிக்க வந்துவிட்டதாக சொல்கிறார்கள். நடிப்பை நான் உயிராக நேசிக்கிறேன். குடும்பம் எனக்கு இரண்டாவதுதான். திருமணத்துக்கு முன்பே கையில் இருந்த படத்தை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டுதான் திருமணம் செய்தேன். அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டியது இருந்ததால் உடனடியாக குழந்தையும் பெற்றுக் கொண்டேன். இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டேன். தொழிலை தெய்வமாக மதிக்கிற எவரும் இதைத்தான் செய்வார்கள்.

நான் குழந்தையோடுதான் படப்பிடிப்புக்கு வருகிறேன். என் அம்மா குழந்தையை கவனித்துக் கொள்கிறார். நேரம் கிடைக்கும்போது நான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் எல்லா நேரமும் என் குழந்தை என் பார்வையில்தான் இருக்கும். பொதுவாக எனக்கு பேய் படங்கள் ஹாரர் படங்கள் பிடிக்காது. பக்கா மசாலாப் படங்கள்தான் பிடிக்கும். ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் இதையெல்லாம் ஒதுக்கி வைத்து விடுவேன். நானே சின்ன வயதில் இறந்து போன என் தாத்தாவை மீண்டும் பார்த்து இருக்கிறேன். அதனால் எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை உண்டு. பேய்கள் மனிதர்களுக்கு தீங்கு செய்யாது என்றும் நம்புகிறேன்.

நான் வெறும் கமர்ஷியல் ஹீரோயின்தான் என்று சொல்பவர்கள் உண்டு. அதுபற்றி கவலையில்லை. விருது வாங்க வேண்டும் என்று ஒரு படத்தில் நடிக்க திட்டமிடுவது பிடிக்காது. நான் நடிக்கும் படத்திற்கு விருது கிடைக்க வேண்டும். அது விரைவில் கிடைக்கும். அதுவரை ரசிகர்களின் கைதட்டலும், பாராட்டலும்தான் பெரிய விருது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.