தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோவையில் நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா நடக்கிறது.
அதன்படி, தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர், ரேஸ் கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர் காலை 11 மணிக்கு பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹால் வளாகத்தில் மாற்றுக் கட்சியினர் 3000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழா நிறைவு பெற்றதும் முதலமைச்சர் ஸ்டாலின் இரவு 11 மணி அளவில் விமான மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.