வேகமாக பரவும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத் பெண் பலி

வதோதரா: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எச்3என்2 எனப்படும் இன்புளூயன்சா  வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியோரை அதிகளவில் தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், `ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாடு முழுவதும் 451 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் எச்3என்2 காய்ச்சல் பரவல் சூழலை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 82 வயது முதியவர் முதலில் உயிரிழந்தார். அதன் பின்னர் தமிழ்நாடு, அரியானா மாநிலங்களில் உள்பட இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தின் வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் பலியாகி உள்ளார். இதன் மூலம் நாட்டில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.