தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியாங்யாங்,

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்தது.

இந்த நிலையில் தென்கொரியா-ஜப்பான் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-இயோல், ஜப்பானுக்கு பயணம் செய்து அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தென்கொரிய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, காலை 7.10 மணிக்கு பியாங்யாங் நகரில் உள்ள சுனான் பகுதியில் இருந்து கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.