புதுடெல்லி: பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்குகிறது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.70,500 கோடி மதிப்புக்கு மேலான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்படி ராணுவத்துக்கு 307 நவீன பீரங்கிகள் (ஏடிஏஜிஎஸ்) ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்திடம் (டிஆர்டிஓ) வாங்கப்படவுள்ளன.
கடற்படை பயன்பாட்டுக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணைகள், ரூ.56,000 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் போர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் சுகாய் ரக போர்விமானத்தில் பயன்படுத்தக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.2,71,538 கோடிக்கு போர் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் 98.9 சதவீதம் இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய – சீனஎல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.