“ராகுல் காந்திக்கு மட்டும் இந்திய நாட்டில் தனிச்சட்டம் கிடையாது” – அண்ணாமலை கருத்து

தூத்துக்குடி: “ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “லட்சத்தீவில் இதேபோல எம்.பி ஒருவருக்கு கொலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதுபோலத்தான், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தபோது மக்கள் பிரதிநிதி அந்த பதவியில், பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார். உச்ச நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்ததன் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதனுக்கு எந்தச் சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும். தமிழகத்தில் அரசை எதிர்த்து விமர்சனம் செய்கிறவர்கள், மீம்ஸ் பதிவிடுபவர்கள், கார்ட்டூன் போடுபவர்களை எல்லாம் காவல் துறை அதிகாலை 2 மணிக்கு எல்லாம் சட்டத்தின் பெயரில் கைது செய்கின்றனர். அப்படியிருக்கும்போது, இந்தியாவில் இருக்கும் ஒரு உயரிய குடும்பம், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் பொருந்தும் இல்லையா? அவருக்கு மட்டும் தனிச்சட்டம் இந்திய நாட்டில் கிடையாது. சட்டத்தின் அடிப்படையில் 30 நாள் மேல்முறையீட்டுக்கு உள்ளது. அவர் மேல்முறையீடு செய்யலாம். உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெறலாம். அதற்கான அனைத்து வழிமுறைகளும் உள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபல், இதுகுறித்து விரிவாக பேசியிருப்பார். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை இது அவராகவே வரவழைத்துக் கொண்டது. சவுக்கிதார் சோர் ஹே என்று சொன்னபோதே உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. இந்தநிலையில் மோடி என்ற துணைப் பெயரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தியிருப்பதாக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சூரத்தில் 500 IPC அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் தீர்ப்பு வரும்போது, ராகுல் காந்தியும் சூரத் நீதிமன்றத்தில் இருந்தார். அந்த தீர்ப்பின் அடிப்படையில் மக்களவை சபநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே, சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராகுல் காந்தி உட்பட சாதாரண மனிதன் வரை அனைவருக்கும் பொருந்தும் என்பதுதான் ஜனநாயகம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.