வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு

வாரணாசி: ‘வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என வாரணாசியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,780 கோடியில் 28 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முன்னதாக உலக காசநோய் தினத்தையொட்டி, ‘ஒரே உலகம் காசநோய்’ மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:

உலகில் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற தொலைநோக்கு பார்வையை இந்தியா முன்வைக்கிறது.  2030க்குள் காசநோயை ஒழிக்க வேண்டுமென்ற உலகளாவிய இலக்கை விட முன்கூட்டி 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 80 சதவீத காசநோய் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பிரசாரங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பலன்களை மேலும் பல நாடுகள் பெற வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். வாரணாசியில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த மோடி, ‘‘உத்தரப்பிரதேச மாநிலம் நம்பிக்கையற்ற நிலையில் இருந்து, தற்போது யோகி ஆதித்யநாத் ஆட்சியில் நம்பிக்கையை நோக்கி உயர்ந்து வருகிறது’’ என பாராட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.