ராமநாதபுரம்: பொதுச்செயலாளர் ஆன பின்னர் எடப்பாடியாருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. எம்ஜிஆரும் நான் தான் எடப்பாடியாரும் நான் தான்; சும்மா அதிருதில்ல’ என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராமநாதபுரத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ‘சிவாஜியும் நான்தான் எம்ஜிஆரும் நான்தான்’ என்ற ரஜினி நடித்த சிவாஜி படத்தின் வசனத்தை உல்டா செய்து போஸ்டர் ஒட்டி பரபரப்பாக்கியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே பிரச்சினை வெடித்தது. எத்தனையோ போராட்டங்கள், தடைகளைத் தாண்டி வென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார். தற்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த மனுக்களின் விசாரணை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிஉடனடியாக பதவி ஏற்றுக்கொண்ட நேரத்தில் அவர் எம்.ஜி.ஆர் போல் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது. சமூக வலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர். நிறைய மீம்ஸ்கள் பதிவிடப்பட்டன.
குறிப்பாக சிவாஜி படத்தின் வசனத்தை பதிவிட்டு மீம்ஸ் பதிவிட்டனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ”எம்ஜிஆரும் நான் தான் எடப்பாடியாரும் நான் தான்; சும்மா அதிருதில்ல’ என ‘சிவாஜியும் நான்தான் எம்ஜிஆரும் நான்தான்’ என்ற ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தின் வசனத்தை உல்டா செய்து போஸ்டர் ஒட்டி பரபரப்பாக்கியுள்ளனர். அதில் சிம்மாசனம் என்றும் எங்கள் சிங்கத்திற்கே என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.