வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம்: இபிஎஸ்

விழுப்புரம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து சேலம் செல்லும் அதிமுக பொது செயலாளர் பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் இன்று அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது, ”அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. அவைகளை எல்லாம் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.

அதிமுக பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும். அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் அது எம்ஜிஆர், ஜெயலலிதா தான். அவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. நம்மைத்தான் வாரிசுகளாக பார்த்தார்கள்.

அதிமுகவை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப் பார்க்கவும் முடியாது. அதிமுகவை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதிமுகவிற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டத்தை அதிமுகவின் கோட்டை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.