அஜித்தை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார்.  நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதியன்று காலமானார்.  இவரது தந்தையின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள அஜித் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது தந்தையின் உடலுக்கு முக்கியமான பிரபலங்கள் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.விஜயபாஸ்கர், அஜித் வீட்டிற்கு சென்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, அஜித்துடனான ஒரு மணி நேர உரையாடலுக்கு பிறகு அவரை பற்றி புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் @Kadamburrajuofl அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.  கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும், உண்மையும், பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது.  ‘எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை’.  அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!” என்று அஜித்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் தனது தந்தையின் மறைவிற்கு பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலாக வீட்டிலேயே இருந்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.  இன்னும் ஒரு மாதத்தில் அவர், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஏகே62’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.  இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.