சேலம்: காவிரியில் வெடிமருந்து வீசி மீன் பிடித்த நபர்… குளித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவராங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரின்  மகன் மோகன்குமார். இவர் நேற்று காலை தனது நண்பர் பூபதி என்பவருடன் சேலம் ஆணைப்புலிக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூபதியும், மோகன்குமாரும் குளிப்பதற்காக காவிரி ஆற்றிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஊத்துக்குளிகாடு  பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மீன் பிடிக்க வந்துள்ளார்.

அப்போது மோகன் குமார் தண்ணீரில் குளித்துக்கொண்டிருக்க, பூபதி கரையில் நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளார்.  அச்சமயம் பெருமாள் எந்தவித அறிவிப்பும் இன்றி தனது கைகளில் வைத்திருந்த பாறைகளை தகர்க்கும் வெடி மருந்து தோட்டாக்களை தண்ணீரில் வீசியுள்ளார். அச்சமயம் தண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருந்த மோகன்குமார் வெடி வெடித்த அதிர்வினில், தண்ணீருக்குள்ளேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

நாட்டு வெடி

இதுகுறித்து தகவலறிந்து பூலாம்பட்டி போலீஸார், அவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட மீனவர் பெருமாளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெருமாளை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதில், இவருக்கு வெடிமருந்து யாரிடமிருந்து கிடைத்தது என்கிற தகவல்களை விசாரித்து வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.