திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது என்று அதிமுக தலைப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி கொடியை நாட்டி இருக்கிறார். உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தற்போதைய தீர்ப்புகளின் படி அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், அதிமுக பொதுக்குழுவில் ஏற்றப்பட்ட தீர்மானங்களின் படி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.
அதே சமயத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்த மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
ஓபிஎஸ் நடத்த உள்ள இந்த மாநாட்டில் அதிமுகவின் கொடி, சின்னம் மற்றும் அதிமுகவின் பெயரை பயன்படுத்த கூடாது என்று, அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மற்றும் பரஞ்சோதி உள்ளிட்ட 1000 க்கு மேற்பட்டோர், பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் ஓ பன்னீர்செல்வத்தை திருச்சியில் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது. இந்த மாநாட்டில் அதிமுக கோடியை ஓபிஎஸ் பயன்படுத்துவது சட்டவிரோதம். உடனடியாக அந்த கோடியை அகற்ற வேண்டும், இந்த மாநாட்டை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர்.